புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மீனவ கிராம மக்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

புயலால் சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மீனவ கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-01-19 22:45 GMT
நாகப்பட்டினம்,

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கீழ்வேளூர், தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகளும் புயலால் சேதமடைந்தன. சேதமடைந்த படகுகளுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது.

இந்தநிலையில் நாகை அருகே பாப்பாகோவில் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய கல்லார் மீனவ கிராமமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லார் மீனவ மக்களுக்கு இதுவரை புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், மேலும் புதிய கல்லார் மீனவர்களின் படகுகள் மொத்தம் 78 படகுகள் சேதமடைந்துள்ளது. அதில் 59 படகுகளுக்கு பகுதி சேதமடைந்ததாக ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 படகுகளுக்கு இதுவரை நிவாரண தொகை வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண தொகை கிடைத்திட உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக வேளாங் கண்ணி-நாகை மெயின் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்