மணவாளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

மணவாளக்குறிச்சி அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2019-01-23 22:15 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கல்படி கழுவன்தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி உஷா(வயது 55). நடராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் உஷா, வெள்ளிமலை கோவிலுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

 அவர், காட்டுகுளத்தின் கரை பகுதியில் வந்த போது, எதிரே மோட்டார்சைக்கிளில் ஒருவர் வந்தார். அவர், திடீரென உஷாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். உடனே உஷா சுதாரித்துக்கொண்டு, சங்கிலியை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். ஆனால் அது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் யாரும் உதவிக்கு வரவில்லை. இதனால் அந்த வாலிபர், உஷாவின் கையை தட்டிவிட்டு சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.

இதுபற்றி உஷா மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உஷாவிடம் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்