மதுராந்தகம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலி 17 பேர் படுகாயம்

மதுராந்தகம் அருகே வேன் கவிழ்ந்து பெண் பலியானார். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-23 23:00 GMT
மதுராந்தகம், 

சென்னையை அடுத்த தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த விச்சூர், ஆலத்தூர் பகுதிகளை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு வந்த அவர்கள் நேற்று காலை வேனில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த ஆனைப்பள்ளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் மதன் (வயது19) வேனை ஓட்டினார். நேற்று காலை 7 மணியளவில் மதுராந்தகத்தை அடுத்த மாமண்டூர் என்ற இடத்தில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

இதில் விச்சூரை சேர்ந்த தயாளன் என்பவரது மகள் அனிதா (18) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் விச்சூர், ஆலத்தூர் பகுதிகளை சேர்ந்த கவுசல்யா (19), விஜயசாந்தி (19), அமராவதி (27), ஆனந்தி (37), பரமேஸ்வரி (34), ஜெயசுதா (34), மற்றொரு ஜெயசுதா, உமாதேவி (32), கீதா (35), சிநேகா (18 ) வள்ளியம்மாள் (29), தமிழ்செல்வி (19) வள்ளியம்மாள் (34) சூர்யா (30) வேளியம்மாள் (32) ஜெயமல்லி (27), டிரைவர் மதன் (19)ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்து காரண மாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்