ஐஸ்அவுசில் பரபரப்பு சம்பவம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு வீடு புகுந்து தாக்கிய கும்பல் தப்பி ஓட்டம்

சென்னை ஐஸ்அவுசில் கள்ளக்காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் வீடுபுகுந்து கணவன்-மனைவியை அரிவாளால் வெட்டிவிட்டு, 5 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடிவிட்டனர்.

Update: 2019-01-25 00:00 GMT
சென்னை,

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை ஐஸ்அவுஸ் வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவருடைய மனைவி விஜயலட்சுமி (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. சரவணன், மெரினாவில் கடைபோட்டு சுண்டல், பஜ்ஜி மற்றும் வறுத்த மீன் வியாபாரம் செய்து வருகிறார். விஜயலட்சுமி, நீச்சல் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சரவணனும், விஜயலட்சுமியும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருந்தனர். அப்போது கையில் அரிவாளுடன் ஆட்டோவில் வந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், சரவணன் வீட்டுக்குள் புகுந்தனர்.

அந்த கும்பல் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு தலையில் பலத்த வெட்டு விழுந்தது. அவரது கை மணிக்கட்டிலும் பலத்த வெட்டுப்பட்டு, பாதி துண்டான நிலையில் தொங்கியது. அவர் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

அப்போது கணவரை காப்பாற்றுவதற்காக போராடிய விஜயலட்சுமிக்கும் தலை மற்றும் கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவரும் பலத்த காயம் அடைந்தார்.

கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்கள், பின்னர் ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்று விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்தவுடன் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன், ராயப்பேட்டை உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போலீஸ் படையுடன் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்று விசாரித்தனர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த சரவணன், விஜயலட்சுமி இருவரும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சரவணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜயலட்சுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரியவந்துள்ளது. அரிவாளால் தாக்குதல் நடத்திய கும்பல் பற்றி விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கள்ளக்காதல் பிரச்சினையில் சரவணனும், அவரது மனைவியும் அரிவாளால் வெட்டப்பட்டு உள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சரவணன் முதலில் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தில் வசித்துள்ளார். அப்போது அங்கு ஒரு பெண்ணுடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் ஏற்பட்ட தகராறால் மாட்டாங்குப்பத்தில் வசித்த வீட்டை காலி செய்துவிட்டு, சரவணன் வி.ஆர்.பிள்ளை தெருவுக்கு வந்துள்ளார்.

இதுதொடர்பாக மாட்டாங்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ ராஜா என்பவருக்கும், சரவணனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அந்த விரோதத்தில் ஆட்டோ ராஜா தனது நண்பர் வினோத் மற்றும் 3 பேருடன் வந்து சரவணனை அரிவாளால் வெட்டியதாக தெரியவந்துள்ளது.

ஆட்டோ ராஜா சம்பவ இடத்துக்கு வந்ததை சரவணனின் மனைவி விஜயலட்சுமியும் விசாரணையில் உறுதி செய்துள்ளார். ஆட்டோ ராஜாவும் மெரினாவில் கடை வைத்துள்ளார். அவரது தாயார் மூலம் பூக்கடையும் நடத்தி வருகிறார். இதனால் அவரை பூக்கடை ராஜா என்றும் அழைப்பார்கள்.

ஆட்டோ ராஜாவையும், அவருடன் வந்தவர்களையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆட்டோ ராஜா பிடிபட்டால்தான் இந்த சம்பவம் பற்றிய முழுமையான விவரங்கள் தெரியவரும். ஐஸ்அவுஸ் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

இந்த சம்பவத்தால் ஐஸ்அவுஸ் பகுதியில் நேற்று மாலை பெரும் பதற்றம் காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்