தஞ்சை புதுஆற்றில் தொழிலாளி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

தஞ்சையில் புதுஆற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-01 22:42 GMT
தஞ்சாவூர்,

கல்லணையில் இருந்து புதுஆற்றில் மிக குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்கிறது. தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகை எதிரே புதுஆற்றில் முழங்கால் அளவு தேங்கியுள்ள தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், பிணமாக கிடந்தார். இதை பார்த்த சிலர், தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில் தஞ்சை ரெயில்வே காலனி தைக்கால் தெருவை சேர்ந்த குரு(வயது 35) என்பதும், அவர் கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக குருவின் உடல் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குரு எப்படி இறந்தார்? என உடனடியாக தெரியவில்லை. ஆற்றுப்பாலத்தில் அமர்ந்தபோது தவறி கீழே விழுந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து தண்ணீரில் வீசிவிட்டு சென்றார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்