பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதல்; வெல்ல வியாபாரி, விவசாயி பலி

பரமத்திவேலூர் அருகே மோட்டார்சைக்கிள்-ஸ்கூட்டர் மோதிய விபத்தில் வெல்ல வியாபாரி, விவசாயி பலியானார்கள்.

Update: 2019-02-04 22:00 GMT
பரமத்திவேலூர், 

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் பூசாரி தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49). வெல்லம், அச்சு வெல்லம் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் நேற்று காலை தனது மோட்டார்சைக்கிளில் பரமத்திவேலூர் நோக்கி புறப்பட்டார். அண்ணா நகர் அருகே சென்றபோது பாண்டமங்கலம் கொளக்காட்டுபுதூரை சேர்ந்த விவசாயி ஆர்.எஸ்.மணி என்ற சுப்பிரமணி (67) என்பவர் ஸ்கூட்டரில் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த சுப்பிரமணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ஆர்.எஸ்.மணியும் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே ஆர்.எஸ்.மணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


பலியான சுப்பிரமணிக்கு நிர்மலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஆர்.எஸ்.மணிக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்