மார்க்கண்டேய நதியை கடப்பதில் சிக்கல், பெருமாள் சிலை செல்வதில் தொடர்ந்து தாமதம்

மார்க்கண்டேய நதியை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெருமாள் சிலை செல்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2019-02-05 23:58 GMT
குருபரப்பள்ளி,

கர்நாடக மாநிலம், பெங்களூரு ஈஜிபுரா பகுதியில், பெருமாள் சிலை அமைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக 64 அடி உயரம், 26 அடி அகலம் கொண்ட பாறையை, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலையில் இருந்து 350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது. இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் வடிவமைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி 240 டயர்கள் கொண்ட மிகப்பெரிய லாரியில் அந்த சிலை புறப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி வழியாக கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையை பெருமாள் சிலை அடைந்தது.

இந்த நிலையில் குருபரப்பள்ளியில் உள்ள மார்க்கண்டேய நதியில் உள்ள பாலத்தில் சிலையுடன் லாரி செல்ல முடியாது என்பதால் அங்கு தற்காலிகமாக சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. அந்த பணிகள் முடிந்து நேற்று முன்தினம் 2 என்ஜின்கள் பொருத்தப்பட்டு லாரி புறப்பட்டது. தற்காலிக மண் சாலையில் லாரி பாதி தூரம் சென்ற நிலையில் அந்த சாலை மேடாக இருந்ததால் லாரியின் டயர்கள் சுற்றும் போது முன்னால் உள்ள என்ஜின் மேலே தூக்கியது. இதனால் லாரி தொடர்ந்து இயக்குவது நிறுத்தப்பட்டது.

இதன் பிறகு அந்த சாலை சற்று சமப்படுத்தப்பட்டு லாரி இயக்கப்பட்டது. ஆனாலும் லாரியால் தொடர்ந்து செல்வதில் சிக்கல் மற்றும் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக பெருமாள் சிலை அந்த இடத்திலேயே இருக்கிறது.

இதனால் மார்க்கண்டேய நதியை பெருமாள் சிலை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையை உயர்த்தி சிலையை கொண்டு செல்வதா? அல்லது கூடுதலாக என்ஜின்களை கொண்டு வருவதா? என்று சிலையை கொண்டு செல்லும் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்