பிரதமர் மோடி திருப்பூருக்கு 10-ந்தேதி வருகை: விடுதிகளில் சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் - போலீஸ் கமிஷனர் அறிவுரை

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 10-ந்தேதி திருப்பூர் வருகை தர உள்ளார்.

Update: 2019-02-06 22:54 GMT
திருப்பூர், 

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 10-ந்தேதி திருப்பூர் வருகை தருகிறார். இதையொட்டி திருப்பூரில் உள்ள விடுதிகளில் சந்தேக நபர்கள் தங்கி இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி திருப்பூரில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் மனோகரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதியில் கடைபிடிக்க வேண்டிய பொதுவான பாதுகாப்பு நடைமுறையை அனைத்து விடுதி நிர்வாகத்தினரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உடனடியாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறைகளை பதிவு செய்பவர்களுடைய முழு விவரங்கள், அடையாள சான்று, புகைப்படம், அறையில் தங்குவதற்கான காரணங்கள் உள்ளிட்ட தகவல்களை முழுமையாக சேகரித்து வைக்க வேண்டும். அறைகளில் யாராவது சந்தேகப்படும் படியான நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்