கல்லூரி மாணவியை கடத்தி திருமணம்: பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நாமக்கல்லில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-02-07 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள கொமரகவுண்டனூரை சேர்ந்த 17 வயது நிரம்பிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜ் குமாரை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்