கல்லூரி மாணவர் மர்ம சாவு: பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

மர்மமான முறையில் இறந்த கல்லூரி மாணவர் பிணத்துடன் உறவினர்கள், நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-08 22:30 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கனந்தம்பூண்டி காலனியை சேர்ந்தவர் கண்ணன், கூலி தொழிலாளி. இவரது மகன் அஜீத்குமார் (வயது 20). இவர் திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை கனந்தம்பூண்டி காலனி அருகே மாந்தோட்டத்தில் உள்ள ஒரு மாமரத்தில் மர்மமான முறையில் அஜீத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை அஜீத்குமாரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி நண்பர்கள் என 100–க்கும் மேற்பட்டோர் அஜீத்குமாரின் பிணத்தை நடுரோட்டில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், அஜீத்குமார் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். இதை அறிந்த இளம்பெண்ணின் உறவினர்கள் தான் அவரை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி அதிரடி படையுடன் வந்தார்.

பின்னர் அவர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பவம் குறித்து மனுவாக எழுதி கொடுங்கள். உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் அந்த சாலையில் வந்த வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்