திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.6 லட்சம் தங்கச்சங்கிலி பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் பயணி கடத்தி வந்த ரூ.6¼ லட்சம் மதிப்பிலான தங்கச்சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளிடம், திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பயணி தனது கழுத்தில் தங்கச்சங்கிலியை அணிந்து உடையில் மறைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த பயணியிடம் விசாரித்தபோது அவர், மதுரையை சேர்ந்த ஆசிக் முகமது என்பதும், 190 கிராம் தங்கச்சங்கிலியை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
பறிமுதல்
இதையடுத்து அந்த தங்கச்சங்கிலியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆசிக் முகமதுவிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.