திருப்பூரில் 100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

திருப்பூரில் நடந்த அரசு விழாவில், திருப்பூரில் 100 படுக்கைகளுடன் கூடிய நவீன வசதிகளை கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

Update: 2019-02-10 23:30 GMT

திருப்பூர்,

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் புதுப்பாளையம் பிரிவில் அரசு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், திருப்பூர் எம்.பி. சத்தியபாமா, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி பொத்தானை அழுத்தி அடிக்கல் நாட்டினார். மேலும் நிறைவடைந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழா மேடையில் இருந்து, சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையை காணொலிக்காட்சி மூலமாக பச்சைக்கொடியசைத்து பிரதமர் தொடங்கிவைத்தார்.

* திருப்பூரில் 1 லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் 7.46 ஏக்கர் பரப்பளவு இடத்தில் ரூ.75 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் 100 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுமானபணி.

*சென்னை விமான நிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டம்.

*திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடம்

*சென்னை கே.கே.நகரில் 19 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் 470 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனை.

*எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன்) பி.பி.சி.எல் முனையம்.

*சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டம்.

* சென்னை டி.எம்.எஸ்.–வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை.

மேலும் செய்திகள்