வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

வெவ்வேறு சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-02-10 22:56 GMT
கன்னிவாடி,

பழனி அருகே உள்ள கல்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 45). விவசாயி. இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். நேற்று காலை ஆடுகளுக்கு தீவனம் சேகரித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். வழியில் சுப்பிரமணி என்பவரின் வயல் பகுதியில் வந்தபோது, அங்கு அறுந்து கிடந்த மின்வயரை எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே வயலுக்கு வந்த சுப்பிரமணி, ஆத்தியப்பன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து கீரனூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆத்தியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த ஆத்தியப்பனுக்கு மீனாட்சி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

கன்னிவாடியை அடுத்துள்ள தெத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பணசாமி (வயது 37). நேற்று அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையொட்டி கருப்பணசாமி அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கருப்பணசாமியின் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் டிரான்ஸ்பார்மரில் தொங்கியபடி கருப்பணசாமி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னிவாடி போலீசார், அங்கு விரைந்து சென்று கருப்பணசாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்