கடையநல்லூர் அருகே பரிதாபம் லாரி- மொபட் மோதல், பள்ளிக்கூட மாணவர் பலி

கடையநல்லூர் அருகே லாரி- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-10 23:30 GMT
கடையநல்லூர், 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை. இவருடைய மகன் சுந்தர் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அவர் தனது மொபட்டில் கடையநல்லூருக்கு சென்றுகொண்டிருந்தார்.

அட்டைக்குளம் அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுந்தர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த இளையராஜாவை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்