குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-02-11 23:00 GMT
கரூர், 

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 342 மனுக்களை பெற்றார்.

கடவூர் தாலுகா, மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி ராஜலிங்கபுரம் காலனி பொதுமக்கள் சரத்குமார் என்பவரது தலைமையில் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், கடந்த சில மாதங்களாக எங்கள் ஊரில் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறுகள் தூர்ந்து போய் உள்ளதால் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி, சின்டக்ஸ் தொட்டிகளில் தண்ணீரை சேமித்து வைத்து வினியோகம் செய்ய முடியவில்லை. அடிபம்புகள் பழுதடைந்து காணப்படுகின்றன.

இதனால் தண்ணீர் தேவைக்காக விவசாய கிணறுகள் உள்ளிட்டவற்றை மக்கள் தேடி செல்கின்றனர். எனவே குடிநீர் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர். முன்னதாக மனுகொடுக்க காலிக்குடங்களுடன் கலெக்டரை சந்திக்க சென்றபோது அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 5 பேர் மட்டும் சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதே போல் கடவூர் ஒன்றியம் வெங்கல்பட்டி பொதுமக்களும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்ககோரி மனு கொடுத்தனர்.

கரூர் அருகேயுள்ள கடம்பன்குறிச்சி, தோட்டக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட எங்கள் கிராமங்களின் வழியாக ஓடும் காவிரியாற்றில் தினமும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தனர். கடவூர் அருகே சேவாப்பூர்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

கரூர் மாவட்ட சாமானிய மக்கள் நலக்கட்சியினர் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டத்தில் உள்ள சில மதுபான பார்களில் விதிகளை மீறி 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

கரூர் மாவட்ட தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலைவர் ஞானசேகரன், தேசிய பொதுசெயலாளர் தலித் பாண்டியன் உள்பட சிலர் கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்து முறையிட்டனர். அந்த மனுவில், வாங்கல் அருகேயுள்ள ஒரு செங்கல்சூளையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர். இதனால் 2 குழந்தைகளுக்கு படிப்பு பறிபோய் விட்டது. இதையறிந்ததும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து சிலர் அந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி சொந்த ஊரில் கொண்டு போய் விட்டு சென்றிருக்கின்றனர். இதற்கிடையே செங்கல் அடுக்கும் போது திடீரென கீழே விழுந்ததில் ஒருவருக்கு அடிபட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். எனவே அவருக்கு மருத்துவ உதவி வழங்கிட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கரூர் அருகேயுள்ள கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, லாலாபேட்டை உள்ளிட்ட பகுதி மக்கள் அளித்த மனுவில், லாலாபேட்டை ரெயில்வேகேட்டை நிர்வாக காரணங்களுக்காக திடீரென மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் போக்குவரத்தினை மேற்கொள்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே அந்த ரெயில்வே கேட்டினை திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்