நிலக்கோட்டை அருகே பரபரப்பு, தாய்- 3 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக தாய் தனது 3 மகன்களுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-11 23:00 GMT
நிலக்கோட்டை, 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள விராலிபட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நிலக்கோட்டை பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு கதிரேசன் (வயது 8), ரவிக்குமார் (6), குமரேசன் (5) என்ற 3 மகன்கள் உள்ளனர்.

இவர்கள் நிலக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தனர். அவர்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்த பாலமுருகன் பணம் தரவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக வீட்டில் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வி கூலி வேலைக்கு சென்று வீட்டுக்கு செலவுகளை கவனித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் பாலமுருகன் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த செல்வி, தனது மூன்று மகன்களுடன் அரளி விதையை அரைத்துக் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் செல்வி, அவருடைய 3 மகன்களை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கதிரேசனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

ரவிக்குமார், குமரேசன் ஆகிய 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மேல்சிகிச்சைக்காக செல்வியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்