பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் பிரதமருக்கு சைமா கோரிக்கை

பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு சைமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-02-11 22:15 GMT
திருப்பூர்,

சைமா சங்க தலைவர் வைக்கிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூருக்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூரை கொண்டு வந்ததற்கு நன்றியை தெரிவித்துகொள்கிறோம். திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்த மருத்துவமனை அமைவதன் மூலம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயனடைவார்கள். பின்னலாடை தொழில் மூலம் கடந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு நடைபெற்றுள்ளது.

இவ்வாறாக பின்னலாடை தொழில் வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே பின்னலாடை தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய திருப்பூரை தலைமையிடமாக கொண்டு பின்னலாடை துறைக்கு தனிவாரியம் அமைக்க வேண்டும். நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் வீடுகள் இல்லாமல் பலர் சிரமத்தை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே மத்திய அரசு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். விரைவில் ஜவுளிக்கொள்கையை சலுகையுடன் வெளியிட வேண்டும். எனவே பிரதமர் மோடி இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்