சாலையை சீரமைக்கக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

சாலையை சீரமைக்கக்கோரி கூடலூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-12 22:30 GMT
கூடலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பகுதியில் கோக்கால் மலை அடிவாரம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் இந்த சாலை வழியாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், தேயிலை விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடையும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் தொடர்ந்து புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை பொதுமக்கள் திரண்டு வந்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் இல்லாததால் உதவி செயற் பொறியாளர் பிரபாகரன் மற்றும் கூடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் அப்பகுதியில் விரைவில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்