கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் ஆவேசம்

புயல் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் அலைக் கழிப்பதாக பொதுமக்கள் ஆவேசப்பட்டனர்.

Update: 2019-02-12 23:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் கஜா புயலால் வீடுகள் சேதமடைந்த ஏராளமானோருக்கு இன்னும் இழப்பீடு தொகை வழங்கப்பட வில்லை. இதனால் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் நூற்றுகணக்கானோர் வந்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் கறம்பக்குடி தாலுகா அலுவலகம் தினமும் பொதுமக்கள் கூட்டத்தால் அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிகளை சேர்ந்த மேலப்பட்டி, கீழப்பட்டி, காத்தான்விடுதி ஆகிய கிராமங்களை சேர்ந்த 250 குடும்பத்தினர் புயல் நிவாரண தொகை வழங்காததை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிவாரண தொகை வங்கி கணக்கில் ஏற்றப்படும் வரை காத்திருப்போம் எனவும், அதிகாரிகள் இன்று, நாளை என அலை கழிப்பதாகவும் பொதுமக்கள் ஆவேசத்துடன் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 தினங்களுக்குள் அவரவர் வங்கி கணக்கில் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், இனிமேல் காலதாமதம் ஆகாது எனவும் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கறம்பக் குடி தாலுகா அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்