காட்டுமன்னார்கோவிலில், புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

காட்டுமன்னார்கோவிலில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-02-12 22:27 GMT
காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அண்ணாநகரை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி தையல்நாயகி. இவர்களுடைய மகள் மணிமேகலை (வயது 19). இவருக்கும் காட்டுமன்னார்கோவில் கச்சேரி தெருவை சேர்ந்த கொத்தனார் மகேந்திரன் என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு மகேந்திரனும், மணிமேகலையும் கச்சேரி ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிமேகலை தான் கர்ப்பமாக இருப்பதாக மகேந்திரனிடம் கூறினார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த மகேந்திரன் அதை உறுதிப்படுத்துவதற்காக அவரை அழைத்துக் கொண்டு காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மணிமேகலை கர்ப்பமாக இல்லை என்று கூறினார்.

இதனால் மணிமேகலை மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிமேகலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தையல்நாயகி காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மணிமேகலைக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்