வாஷி மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீனவர் காப்பாற்றினார்

வாஷி மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீனவர் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார்.

Update: 2019-02-12 23:00 GMT
மும்பை, 

வாஷி மேம்பாலத்தில் இருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீனவர் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார்.

கடலில் குதித்த பெண்

நவிமும்பை வாஷி கழிமுக மேம்பாலத்தில் நேற்று முன்தினம் மதியம் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையை கீழே படகில் இருந்த மீனவர் பார்த்து சந்தேகம் அடைந்தார். மேலும் அங்கிருந்து செல்லும்படி பெண்ணை சத்தம் போட்டார். இருப்பினும் அப்பெண் திடீரென பாலத்தில் இருந்து கடலில் குதித்து உள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர் உடனடியாக பெண் குதித்த இடத்திற்கு படகை விரைவாக செலுத்தினார்.

பின்னர் அந்த பெண்ணை மயங்கிய நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பின் அவர் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பினார். போலீஸ் விசாரணையில், அந்த பெண் ஜூயு நகரை சேர்ந்த ரேகா பரமேஸ்வரி(வயது32) என்பது தெரியவந்தது.

போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசார் பெண்ணின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வாஷி கழிமுக மேம்பாலத்தில் இருந்து தற்கொலை நோக்கத்துடன் கடலில் குதித்த 43 பேரை அப்பகுதி மீனவர்கள் காப்பாற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்