ஆம்பூரில் கார் கவிழ்ந்து அரக்கோணம் நகராட்சி பணியாளர் பலி

ஆம்பூரில் கார் கவிழ்ந்து அரக்கோணம் நகராட்சி பணியாளர் பரிதாபமாக இறந்தார். குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-02-12 22:00 GMT
ஆம்பூர்,

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் நாகராஜ் (வயது 44). இவர் தனது மனைவி ராணி, மகன் ஜவந்த் (2½), உறவினர் கமலேஷ் ஆகியோருடன் மைசூரு சென்று விட்டு ஒரு காரில் அரக்கோணம் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை டிரைவர் அரிஷ் (23) என்பவர் ஓட்டி வந்தார்.

கார் ஆம்பூர் கோவிந்தாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் இறங்கி, அருகில் இருந்த சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் அனைவரும் காருக்குள் சிக்கி கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து சென்று காரில் சிக்கி படுகாயம் அடைந்த நாகராஜ், ராணி, ஜவந்த், கமலேஷ், டிரைவர் அரிஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நாகராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் மேல்சிகிச்சைக்காக ராணி, ஜவந்த் ஆகியோர் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்