இருவிதமான வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு அயற்சி உருவாகும் ஆராய்ச்சி நிலையம் தகவல்

இருவிதமான வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு வெப்ப அயற்சி உருவாகும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

Update: 2019-02-15 21:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 4 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தெற்கில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில், பகலில் வெப்பம் உயர்ந்தும், இரவில் வெப்பம் குறைந்தும் காணப்படும். இருவிதமான வெப்ப அளவுகளால் கோழிகளுக்கு வெப்ப அயற்சி உருவாகும். இதை சரி செய்ய தீவனத்தில் சோடா உப்பு மற்றும் வைட்டமின்-சி சேர்ப்பது மட்டுமின்றி, எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும் தாது உப்புகளையும் சேர்த்து தரவேண்டும். இதனால் வெப்ப அயற்சி குறைவதோடு, முட்டை உற்பத்தி அதிக அளவில் குறையாது.

கடந்த வாரம் கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்தபோது, பெரும்பாலான கோழிகள் ஈகோலை கிருமியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனம் மற்றும் குடி நீரில் ஈகோலை கிருமியின் தாக்கம் உள்ளதா? என கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் குடிநீர் மற்றும் தீவன மேலாண்மை முறைகளை கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்