அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 2,320 பயனாளிகளுக்கு ரூ.5¾ கோடி மானியம் தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தகவல்

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 2 ஆயிரத்து 320 பயனாளிகளுக்கு ரூ.5¾ கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.

Update: 2019-02-15 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த 2018-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வேலைக்கு செல்லும் மகளிருக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க 50 சதவிகித மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பணிக்கு செல்லும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொள்ள ரூ.25 ஆயிரம் மானியம் அல்லது வாகன விலையில் 50 சதவிகிதம் வழங்கப்படுகிறது.

மேலும், இத்திட்டத்தில் மகளிரை குடும்ப தலைவராக கொண்ட குடும்ப உறுப்பினர்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் இதுவரை 2 ஆயிரத்து 320 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 80 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் 297 மகளிர்களுக்கும், கும்பகோணம் நகராட்சி பகுதியில் 203 மகளிர்களுக்கும், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் 83 மகளிர்களுக்கும், 22 பேரூராட்சிகளில் 327 மகளிர்களுக்கும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் 1,410 மகளிர்களுக்கும் என அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்