திருச்சி விமான நிலையத்தில் ரூ.3¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமானநிலையத்தில் ரூ.3¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-02-16 22:45 GMT
செம்பட்டு,

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி விமான நிலையத்துக்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது சிக்கந்தர் என்ற பயணியிடம் சோதனை நடத்தியபோது, அவர் காசு வடிவில் 110 கிராம் தங்கத்தை தனது காலணியின் உள்ளே மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

2 பேரிடம் விசாரணை

இதேபோல, காயல்பட்டினத்தை சேர்ந்த முகமது ஹுசைன் என்பவரிடம் நடத்திய சோதனையில், 50 கிராம் தங்க சங்கிலியை தனது இடுப்பு பகுதியில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரிடம் இருந்து மொத்தம் 160 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 64 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக முகமது சிக்கந்தர், முகமதுஹுசைன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்