பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சிவசந்திரனுக்கு சிலை வைக்க வேண்டும் வைகோ பேட்டி

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சிவசந்திரனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

Update: 2019-02-17 23:15 GMT
ஜெயங்கொண்டம்,

காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் ஒருவரான அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்த சிவசந்திரனின் உடல் நேற்று முன்தினம் அவருடைய வீட்டின் அருகே உள்ள சிவசந்திரனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சிவசந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.


தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பயங்கரவாதிகள் கிள்ளி எறியப்பட வேண்டும். அவர்கள் வேரோடு அழிக்கப்பட வேண்டும். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) நான் மலேசியாவில் இருந்தேன். அங்கிருந்து வந்த உடனேயே எனது சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும், 120 கோடி இந்தியர்களின் சார்பாகவும் எனது இரங்கலை இந்த கார்குடி கிராமத்தில் சிவசந்திரனுக்கு தெரிவித்தேன். அவருடைய மனைவி டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளதால், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கூறி உடனடியாக அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும். சிவசந்திரனுக்கு நினைவு சின்னம், சிலை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்