துறையூர் அருகே குறி சொல்பவர் அடித்துக்கொலை போலீசார் விசாரணை

துறையூர் அருகே குறி சொல்பவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-02-17 22:15 GMT
துறையூர்,

துறையூரை அடுத்த பச்சமலை வண்ணாடு ஊராட்சியில் உள்ள வாழையூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 60). குறி சொல்பவர். இவரிடம் குறி கேட்பதற்காக, பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரை சேர்ந்த வெங்கடேசன்(46) தனது குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் பொன்னுசாமி வீட்டிற்கு சென்றார். குறி கேட்ட பின்னர், இரவு நேரம் ஆகிவிட்டதால் அவர்களால் ஊருக்கு திரும்பி செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் பொன்னுசாமி வீட்டில் தங்கினர்.

அனைவரும் தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென எழுந்த வெங்கடேசன், அங்கிருந்த கட்டையை எடுத்து பொன்னுசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த பொன்னுசாமிக்கு அருகில் சென்று அவர்கள் பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து கிராம மக்கள், வெங்கடேசன் மற்றும் அவருடைய மனைவி, குழந்தைகளை பிடித்தனர். நேற்று வெங்கடேசனை தவிர, அவருடைய குடும்பத்தினரை அங்கிருந்து செல்லுமாறு கிராம மக்கள் கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து வெங்கடேசனின் மனைவி, துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் வாழையூர் கிராமத்திற்கு சென்று, வெங்கடேசனை மீட்டனர். அவர் மயங்கிய நிலையில் இருந்ததால், துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொன்னுசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்