அரசின் நலத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைய நடவடிக்கை திருவாரூர் புதிய கலெக்டர் ஆனந்த் பேட்டி

அரசின் நலத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட புதிய கலெக்டர் ஆனந்த் கூறினார்.

Update: 2019-02-18 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டராக இருந்த நிர்மல்ராஜ் பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து வந்த ஆனந்த், திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைகிற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முழு முனைப்புடன் செயல்படும். திருவாரூர் மாவட்டம் அனைத்து துறைகளிலும் முதன்மை இடத்தை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இணை மேலாண்மை இயக்குனராக...

திருவாரூர் மாவட்ட கலெக்டராக புதிதாக பதவி ஏற்ற ஆனந்த், கடந்த 2009-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து, திருக்கோவிலூரில் துணை கலெக்டராக பணியாற்றினார். பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவி கலெக்டராகவும், பொது வினியோகத் திட்ட கூடுதல் பதிவாளராகவும் பதவி வகித்தார்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றிய அவர், தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்