நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை திருத்தி அமைக்க வலியுறுத்தல்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை திருத்தி அமைக்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-18 23:00 GMT
நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நெல்லையை அடுத்த குன்னத்தூரை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் நுழைவுவாயில் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் பொதுமக்கள் தனித்தனியாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்கள் பகுதியில் வசதி படைத்தவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வறுமை நிலையில் உள்ள எங்களை வறுமைக் கோர்ட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதேபோல் ஏர்வாடி மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதேபோல் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள் மாரிமுத்து, சண்முகவேல் ஆகியோர் தலைமையில் ஏராளமான பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் பட்டியலை திருத்தி அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் ஊரில் நீண்ட நாட்களாக புதிய சாலை போடப்படாமல் உள்ளது. தற்போது சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கியுள்ளது. எங்கள் ஊருக்கும் சாலை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

திருவேங்கடத்தை அடுத்த மகேந்திரவூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் பயிர்க்கடன் வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் வரகுணன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில், “பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்கிறது. உடனடியாக ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த பொதுமக்கள், குடிநீர் சீராக வினியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர்.

பிற்படுத்தப்பட்ட அணியின் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜான்கென்னடி தலைமையில், மாநில துணை தலைவர் காமராஜ், சிவாஜி முத்துக்குமார் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு மண்பானையுடன் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “திசையன்விளை சுற்றுவட்டார பகுதி மழை மறைவு பிரதேசம் ஆகும். சரியாக மழை பெய்யாத காரணத்தால், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. திசையன்விளை பகுதி குளங்களுக்கு மணிமுத்தாறு அணையில் இருந்து 3 மற்றும் 4-வது ரீச்சுகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நிலத்தடி நீரும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

விஷ்வ இந்து பரிஷத் நெல்லை மாநகர செயலாளர் முருகேசன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டன. அதை சிலர் சேதப்படுத்தி விட்டனர். இதுபற்றி செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ஆனால் போலீசார் எங்களை அவதூறாக பேசுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்