வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலைக்கு காரணமான காப்பீடு நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை

வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்த வழக்கில் காப்பீடு நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-02-19 23:15 GMT
திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் சேஷாத்திரிபுரத்தை சேர்ந்தவர் ஜெயசீலன். மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ஞானசவுந்தரி. சத்துணவு ஊழியர். இவர்களுடைய மகள் ராஜலட்சுமி(வயது 29).

இவரை சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த செல்வகணபதி (30) என்பவருக்கு 12-4-2012 அன்று திருமணம் செய்து கொடுத்தனர். செல்வகணபதி தனியார் காப்பீடு நிறுவன ஊழியர் ஆவார்.

திருமணத்தின்போது ராஜலட்சுமிக்கு அவரது பெற்றோர் 30 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்து இருந்தனர். சென்னையில் கணவருடன் ராஜலட்சுமி குடும்பம் நடத்தி வந்தார். அவருக்கு ஜெயவடிவாம்பாள் என்ற பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் செல்வகணபதி மற்றும் அவரது குடும்பத்தினர் ராஜலட்சுமியிடம் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். இதனால் மனம் உடைந்த ராஜலட்சுமி கணவர் வீட்டில் கோபித்துக்கொண்டு தனது குழந்தையுடன் ஸ்ரீரங்கத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார்.

கடந்த 12-7-2015 அன்று ராஜலட்சுமி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஞானசவுந்தரி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி ராஜலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக இருந்ததாக செல்வகணபதி, அவரது தாயார் கோமதி, அக்காள் ருக்குமணி, அக்காள் கணவர் சுப்பிரமணியன் ஆகிய 4 பேரை கைது செய்து திருச்சி மகிளா கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி ஜி.மகிழேந்தி விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட செல்வகணபதிக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். கோமதி, ருக்குமணி, சுப்பிர மணியன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் படாததால் அவர்கள் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்