தன்னை ஏற்றிவிட்ட ஏணிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு

தன்னை ஏற்றிவிட்ட ஏணிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2019-02-20 23:15 GMT

சேலம், 

சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று 2–வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை, அரிசிபாளையம் அவ்வையார் மார்க்கெட், வின்சென்ட், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் ஆகிய பகுதிகளில் டி.டி.வி.தினகரன், திறந்த வேனில் நின்றபடி மக்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

விரைவில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தமிழக மக்கள் விரும்பாத சில கட்சிகள் தற்போது ஒன்றாக சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர். அ.தி.மு.க.வுடன் பா.ம.க. மற்றும் பா.ஜனதா கட்சி சேர்ந்திருப்பது மக்கள் நலக்கூட்டணி அல்ல. அவர்கள் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட கூடாது. அவர் உயிரோடு இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்களுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். இந்த தேர்தலில் ஒரு கட்சி பண மூட்டைகளுடன் வருவார்கள். மற்றொரு கட்சி தங்களது பலத்தை நிரூபிக்க வருவார்கள். ஆனால் மக்களாகிய நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது. தமிழக விவசாயிகளை பாதிக்கின்ற மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் எதிர்த்து தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் அவரது பெயரை சொல்லிக்கொண்டு தற்போது ஆட்சி புரிந்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் காலில் விழுந்து ஏவல் அரசாக மாறிவிட்டது.

தன்னை ஏற்றிவிட்ட ஏணிக்கே துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் இழுத்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது அவர் ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் நலனுக்காக அல்ல. இதை சேலம் மாவட்ட மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, போட்டியிட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை அந்த தொகுதி மக்கள் வெற்றிபெற செய்தார்கள்.

இரட்டை சிலை சின்னம் தற்போது துரோகிகளின் கையில் உள்ளது. தமிழக மக்கள் எப்போதும் துரோகத்திற்கு துணை போக மாட்டார்கள். தமிழகத்தில் நடக்கிற ஆட்சி எப்போது முடிவுக்கு வரும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது விரைவில் மாறும். அந்த மாற்றத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொண்டுவரும். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை நீங்கள் வெற்றிபெற செய்ய வேண்டும். அதற்கு அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

இதைத்தொடர்ந்து செவ்வாய்பேட்டை அப்புசெட்டி தெரு, தாதகாப்பட்டி, நெத்திமேடு ஆகிய பகுதிகளிலும் மக்களை சந்தித்து டி.டி.வி.தினகரன் பேசினார்.

மேலும் செய்திகள்