கிணத்துக்கடவு பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 400 பேருக்கு அபராதம்

கிணத்துக்கடவு பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-02-20 22:45 GMT
கிணத்துக்கடவு,

கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலை செல்கிறது. இந்த சாலை வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் பெரும்பாலான விபத்துகளில் சிக்குபவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தான். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலை கவசம் (ஹெல்மெட்) அணியாமல் வருவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.எனவே விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுகின்றார்களா? இரண்டுசக்கர வாகனங்கள் ஓட்டும் போது ஹெல்மெட் அணிகிறார்களா என்பதை கண்காணிக்க கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோவை-பொள்ளாச்சி மெயின்ரோடு, முள்ளுப்பாடி கொண்டம்பட்டி ரோடு, சொக்கனூர் ரோடு, அரசம்பாளையம்பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி கூறியதாவது :-

கிணத்துக்கடவு பகுதியில் கடந்த மாதம் மட்டும் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்த 7 பேர் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர். தற்போது வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் எங்களின் உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி கிணத்துக்கடவு வழியாக கோவை -பொள்ளாச்சி ரோடு உள்ளிட்ட பல இடங்களில் காலை, மாலை நேரங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த வாகன சோதனையில் இதுவரை ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை ஓட்டிய 400 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்