சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் திடீர் ஆய்வு பழுதான வகுப்பறை கட்டிடத்தை அகற்ற உத்தரவு

சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பழுதான வகுப்பறை கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டார்.

Update: 2019-02-20 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை–மேலூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த பள்ளி இருக்கும் பகுதி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசு பள்ளியை கண்டதும் அமைச்சர் திடீரென அந்த பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது பள்ளியின் கழிவறை, குடிநீர் வசதிகள் குறித்து அமைச்சர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பள்ளியில் முறையான குடிநீர் வசதி இல்லாததை கண்டு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விவரம் கேட்ட அமைச்சர், பின்னர் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

மேலும் அங்கு கடந்த 1984–ம் ஆண்டு கட்டப்பட்ட பழுதான வகுப்பறை கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதை கண்ட அவர், அதுகுறித்து மாவட்ட பொதுப்பணித்துறை பொறியாளரை தொடர்பு கொண்டு அந்த பழுதான கட்டிடத்தை 10 நாட்களுக்குள் அகற்ற உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்