திண்டிவனத்தில் துணிகரம் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை

திண்டிவனத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-21 22:30 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் மல்லி பத்தன் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி(வயது 62), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு, புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகன் பரசுராமனை பார்க்க சென்றார். இரவு நீண்டநேரம் ஆகிவிட்டதால் ரங்கசாமி மருத்துவமனையில் மகனுடன் தங்கிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை ரங்கசாமியின் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ரங்கசாமிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதனால் பதறிய ரங்கசாமி வீட்டுக்கு விரைந்து வந்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், ரங்கசாமி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் ராக்கி, சம்பவம் நடைபெற்ற வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி மல்லிபத்தன் தெரு சந்திப்பு வரை ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் விழுப்புரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்