மாமியாரை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

மாமியாரை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2019-02-21 22:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள கருக்கன்சாவடியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் முத்து (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கும், போச்சம்பள்ளி அருகே உள்ள அனகோடியை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் சங்கீதா (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் சங்கீதா தனது தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 21.03.2016 அன்று தனது மனைவி சங்கீதாவை அழைத்து வர முத்து அவரது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது சங்கீதாவின் தாய் குந்தியம்மாளுக்கும் (57), முத்துவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த முத்து தனது மாமியார் குந்தியம்மாளை தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து சங்கீதா போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி குந்தியம்மாளை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்