புதுப்பேட்டை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது

புதுப்பேட்டை அருகே மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த விவசாயியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-21 22:30 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் சுப்பையா (வயது 58), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள தனது கரும்பு தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த பண்டரக்கோட்டையை சேர்ந்த கலியமூர்த்தி மகன் பழனிசாமி(30) என்பவர் சுப்பையாவிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பழனிசாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுப்பையாவை வெட்டினார். இதில் அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து சுப்பையா புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, பழனிசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்