வீடு புகுந்து தாய்- மகன் மீது தாக்குதல் 10 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூரில் வீடு புகுந்து தாய் மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-21 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா. இவருடைய மனைவி அமுதா (வயது 43). இவர்களுடைய மகன் விக்னேஷ். இவர் தேரக்கால்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இவரும் மாதவலாயத்தை சேர்ந்த வசீமும் நெருங்கிய நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று வசீம் தனது நண்பர்கள் 9 பேருடன் 5 மோட்டார்சைக்கிள்களில் செண்பகராமன்புதூரில் உள்ள விக்னேஷ் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டில் இருந்த விக்னேசை வசீம், நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க வந்த அமுதாவையும் அவர்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் காயம் அடைந்த விக்னேஷ் பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அமுதா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன்பேரில் வசீம், சகில், சாதிக், பாரிப், அசிம், சல்மான் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்