லாட்டரி கடை உரிமையாளரை கடத்தி பணம் பறிப்பு சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் பணி நீக்கம் கமிஷனர் அதிரடி நடவடிக்கை

லாட்டரி கடை உரிமையாளரை கடத்தி பணம் பறித்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரரை பணி நீக்கம் செய்து கமிஷனர் சுபோத் ஜெய்ஸ்வால் உத்தரவிட்டார்.

Update: 2019-02-21 22:42 GMT
மும்பை,

மும்பை விக்ரோலி பகுதியை சேர்ந்தவர் ஹனுமந்த். இவர் காலாசவுக்கி பகுதியில் லாட்டரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 25-ந் தேதி அவரது கடைக்கு சிறப்பு பிரிவை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ராம்சந்திரா ஜாதவ் (வயது51), போலீஸ்காரர் அவினாஷ் (54) ஆகிய 2 பேர் வந்தனர்.

சட்டவிரோதமாக கடை நடத்தி வருவதாக கூறிய அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பணம் தர வேண்டும் என மிரட்டினர். இதனால் அவர் கடையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை எடுத்துக் கொடுத்தார். ஆனால் போலீசார் அவரை விடவில்லை.

கைது

மேலும் பணம் வேண்டும் என கூறி அவரை தங்களது காரில் கடத்தி சென்று, காட்டன்கிரீன் பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் அவரது கணக்கில் இருந்து பணத்தை எடுத்து தரும்படி மிரட்டினர். இதனால் பயந்து போன அவர் ரூ.10 ஆயிரத்து 500-ஐ எடுத்து கொடுத்தார். பின்னர் இதுபற்றி அவர் காலாசவுக்கி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹனுமந்திடம் பணம் பறித்த சப்-இன்ஸ்பெக்டர் ராம்சந்திரா ஜாதவ், போலீஸ்காரர் அவினாஷ் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். இருவர் மீதும் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் இருவரும் லாட்டரி கடைக்காரரை கடத்தி பணம் பறித்தது உறுதிப்படுத்தப்பட்டது.

பணி நீக்கம்

இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் சுபோத் ஜெய்ஸ்வாலுக்கு போலீஸ் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர். இந்த நிலையில், லாட்டரி கடைக்காரரிடம் பணம் பறித்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசாரையும் கமிஷனர் சுபோத் ஜெய்ஸ்வால் அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு லஞ்சம் வாங்கிய தேவ்னார் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தத்தாத்ரே பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்