காணாமல் போன முகிலனை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட தலைவர் சதா தலைமையில் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர்.

Update: 2019-02-23 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட தலைவர் சதா தலைமையில் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலனை கடந்த வாரம் முதல் காணவில்லை. இன்னும் அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. “சென்னையில் கடந்த 15-ந் தேதி கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்” என்ற பெயரில் அவர் முக்கிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு 11.30 மணிக்கு மேல் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மதுரைக்கு புறப்படும் ரெயிலில் ஏறுவதற்காக அவரும், கரூர் செல்வதற்காக அவருடைய நண்பர் பொன்னரசனும் சென்றனர். அங்கு பொன்னரசனை மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்றி அனுப்பி விட்டு, மதுரை ரெயிலில் ஏறச்சென்றவர் இதுவரை மதுரை வந்து சேரவில்லை. அவருடைய செல்போனும் 16-ந் தேதி அன்று காலையில் இருந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்