மடத்துக்குளம் அருகே மின் கசிவால் தீ விபத்து; கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு - ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

மடத்துக்குளம் அருகே மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் தீயில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-23 22:58 GMT
மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு பகுதியில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சூடமணி நகரில் குழந்தைவேலு (வயது 59). கூலித்தொழிலாளி. அவரது மனைவி கருப்பாத்தாள் (50). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருக்கிறார். இவர்களது வீடு முன்பக்கம் கூரையும், பின்புறம் ஓடுகளும் அமைக்கப்பட்ட வீடு ஆகும். இந்நிலையில் நேற்று மதியம் கருப்பாத்தாள் மற்றும் குழந்தைவேலு ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூரைப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த மின்சார வயரில் மின்கசிவு ஏற்பட்டு கூரையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த கருப்பாத்தாள் மற்றும் குழந்தைவேலு ஆகியோரை அவசரமாக வெளியில் அழைத்து வந்தனர். சிலர் தீயை அணைத்து கொண்டிருந்தனர். இதற்கிடையே வீட்டில் கியாஸ் சிலிண்டர் இருப்பதை தெரிந்த அவர்கள் தீயை அணைக்காமல் அங்கிருந்து வேறு இடத்திற்கு ஓட்டம் பிடித்தனர். இதனால் தீ வேகமாக வீடு முழுவதும் பரவியது. இந்நிலையில் தீ கியாஸ் சிலிண்டர் மீது பற்றியதால் கியாஸ் சிலிண்டர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகை உள்ளிட்ட பொருட்கள் தீ விபத்தில் சேதமானதாக கருப்பாத்தாள் தெரிவித்தார்.

இதுதவிர வெளியில் நின்று கொண்டிருந்த 6 பழைய மோட்டார் சைக்கிள்களும் சேதமாகின. இதனால் மொத்த சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தீவிபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். சிலிண்டர் வெடித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்