மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது

மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-24 22:45 GMT
சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று இவளை அதே பகுதியை சேர்ந்த பாலகுரு மகன் திலகர்(வயது 32), தொழிலாளி ஜெய்சங்கர் (47) ஆகியோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக அந்த மாணவி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுபற்றிய புகாரின் பேரில் ஜெய்சங்கர் உள்பட 2 பேர் மீது சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலகரை கைது செய்தனர். ஜெய்சங்கரை தேடி வந்தனர்.

இதற்கிடையே தலைமறைவான ஜெய்சங்கரையும் கைது செய்ய கோரி, பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தலைமறைவான ஜெய்சங்கரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று, ஜெய்சங்கரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்