பிரதமர் அறிவித்த ரூ.6 ஆயிரம் உதவி தொகைக்கு விவசாயிகள் விண்ணப்பங்கள் அளிக்க இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்

பிரதமர் அறிவித்த ரூ.6 ஆயிரம் உதவி தொகைக்கு விவசாயிகள் விண்ணப்பங்கள் அளிக்க இன்று முதல் 3 நாட்கள் தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2019-02-24 23:00 GMT
திருச்சி,

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிகழ்வு காணொலி காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விழா முடிந்ததும் திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 100 விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான சான்றிதழ்களை வழங்கினார். அப்போது மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களையும் சேர்ந்த 700 விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விழாவில் டி.ரத்தினவேல் எம்.பி. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் தொடர்பாக கலெக்டர் சிவராசு கூறியதாவது:-

இந்த உதவித் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். முதற் கட்டமாக, இந்த உதவித் தொகையானது டிசம்பர் 1, 2018 முதல் மார்ச் 31, 2019 வரையிலான காலத்திற்கு ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 1.25 ஏக்கர் நன்செய் அல்லது 2.5 ஏக்கர் புன்செய் அல்லது அதற்கும் குறைவாக விவசாய நிலம் வைத்திருக்கும் குறு விவசாய குடும்பத்தினர் மற்றும் 2.5 ஏக்கர் நன்செய் அல்லது 5 ஏக்கர் புன்செய் அல்லது அதற்கும் குறைவான விவசாய நிலம் வைத்திருக்கும் சிறு விவசாய குடும்பத்தினர் இந்த தொகையைப் பெற தகுதியுள்ளவராவர்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறிய தகுதியான விவசாயிகள் தற்போது விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் 25-ந் தேதி (இன்று) 26, மற்றும் 27 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.

விடுபட்டுபோன தகுதியான விவசாயிகள் வங்கிக் கணக்கு புத்தக எண், ஆதார் அட்டை எண், ஸ்மார்ட் ரேசன் கார்டு எண், அலைபேசி எண் மற்றும் பட்டா விவரங்களை வழங்கி தங்களது பெயர்களை பதிவு செய்து இத்திட்டத்தின் மூலம் உதவித் தொகை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்