மடத்திகாடு, உப்புவிடுதி கிராமங்களில் விடுபட்ட தென்னை விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும்

மடத்திகாடு, உப்புவிடுதி கிராமங்களில் விடுபட்ட தென்னை விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-02-25 22:45 GMT
திருச்சிற்றம்பலம்,

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் பல லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்தன. இதனால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புயல் பாதிப்புக்குள்ளான தென்னை மரங்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டது.

திருச்சிற்றம்பலம் வருவாய் சரக பகுதியில் உள்ள மடத்திகாடு, உப்புவிடுதி ஆகிய 2 கிராமங்களில், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் புயல் பாதிப்புக்குள்ளான தென்னந்தோப்புகளை நேரில் பார்வையிட்டு, சேத மதிப்புகள் குறித்து அறிக்கை அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஒரு தென்னை மரத்துக்கு ரூ.1,100 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.


அதன்படி திருச்சிற்றம்பலம் வருவாய்சரக பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் புயல் தாக்கி 3 மாதங்கள் ஆகியும் மடத்திக்காடு, உப்புவிடுதி கிராமங்களில் உள்ள தென்னை விவசாயிகளில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இதுவரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்களுக்கு நிவாரண தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

 எனவே மடத்திக்காடு, உப்புவிடுதி ஆகிய கிராமங்களில் விடுபட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரண தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தென்னை விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்