பட்டிவீரன்பட்டி அருகே பயங்கரம், மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 3 தொழிலாளர்கள் பலி

பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் பலியாகினர்.

Update: 2019-02-28 22:45 GMT
பட்டிவீரன்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவை சேர்ந்தவர் சேது (வயது 30). கூலித்தொழிலாளி. இவரது நண்பர்கள் கண்ணன் (24), மார்க்கண்டேயன் (22) இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சித்தரேவிலிருந்து அய்யம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சேது ஓட்டினார்.

சித்தரேவு லட்சுமணபுரம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே தேனி மாவட்டம், வருசநாடு அருகேயுள்ள தும்மக் குண்டுவை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான காயக்குடியான் என்ற பச்சத்தண்ணி (42), சின்னப்பாண்டி (30) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் சேது, காயக்குடியான், சின்னப்பாண்டி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்த கண்ணன், மார்க்கண்டேயன் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக மார்க்கண்டேயன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், விபத்தில் பலியான காயக்குடியானின் பெரியம்மா சித்தரேவில் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காயக்குடியான், உறவினர் சின்னப்பாண்டியும் மோட்டார் சைக்கிளில் சித்தரேவுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது. மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது. 

மேலும் செய்திகள்