காரில் கடத்தப்பட்ட 1,440 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது

மயிலாடுதுறை அருகே காரில் கடத்தப்பட்ட 1,440 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-03 23:15 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மது கடத்துதல், சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார்.

அதன்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தனிப்படை போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மது கடத்தி செல்வது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மயிலாடுதுறை சித்தர்காடு மெயின் சாலை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது34), சரவணன் (35) ஆகியோர் என்பதும் காரில் 1,440 மதுபாட்டில்களை கடத்தி செல்வதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மது கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 1,440 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்