ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கக்கோரி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது

ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்கக்கோரி நாகையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-04 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் தமிம் அன்சாரி முன்னிலை வகித்தார். மாநிலத்துணை தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்கி, இலவச வீடு கட்டித்தரவேண்டும். மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும். டெல்லியில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு இணையாக தமிழ்நாட்டிலும் வழங்கவேண்டும்.

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி முற்றிலும் இலவசமாக வழங்கவேண்டும். இயற்கை மரணமடையும் தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சமும், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், தொழிற்சங்கத்தை சேர்ந்த செந்தில்குமார், மதியழகன், கர்ணன், சொக்கலிங்கம், லெனின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்