கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் திடீர் தர்ணா போராட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-05 22:45 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலையில் 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க போவதாக கூறி உள்ளே சென்றனர்.

திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் தங்கள் கைகளில் கோரிக்கை குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், நாங்கள் பலமுறை அரசு வேலை கேட்டு மனு கொடுத்து உள்ளோம்.

ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படவில்லை. நாங்கள் வேலை இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம். எங்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு போலீசார், விரைவில் வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்