கேரள சிறையில் அடைக்கப்பட்டவர் உள்பட 4 மாவோயிஸ்டுகள் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்

கேரள சிறையில் அடைக்கப்பட்டவர் உள்பட 4 மாவோயிஸ்டுகள் திண்டுக்கல் கோர்ட்டில் பலத்த பாதுகாப்புடன் ஆஜராகினர்.

Update: 2019-03-05 22:30 GMT
திண்டுக்கல்,

கொடைக்கானல் அருகேயுள்ள வடகவுஞ்சி மலைப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள், பதுங்கி இருந்து ஆயுத பயிற்சி மேற்கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிரடிப்படை போலீசார் அங்கு சென்று மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தனர். மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில், நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு கொல்லப்பட்டார்.

அதேநேரம் 2 பெண்கள் உள்பட 7 மாவோயிஸ்டுகள் தப்பிவிட்டனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். அதில் காளிதாஸ் கேரள மாநிலம் பாலக்காட்டிலும், பகத்சிங் சேலம் சிறையிலும், அவருடைய தங்கை செண்பகவல்லி மதுரையிலும், கண்ணன் கோவையிலும், ரீனாஜாய்ஸ்மேரி வேலூர் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் வெளியே சென்று விட்டனர்.

இந்த நிலையில் கொடைக்கானல் மலையில் மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு நேற்று, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி ஆகியோரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் காளிதாஸ் நீண்ட நாட்களுக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கண்ணன், ரீனாஜாய்ஸ்மேரி ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் ஜாமீனில் வெளியே இருப்பவர்களில் நீலமேகம் மட்டும் ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டார். மாவோயிஸ்டுகள் ஆஜரானதையொட்டி கோர்ட்டு வளாகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். 

மேலும் செய்திகள்