இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக ரூ.6 ஆயிரத்துக்கு அடமானம் வைத்த சிறுவன் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை

கஜா புயலினால் தென்னை மரம் விழுந்து இறந்த தந்தையின் இறுதி சடங்கிற்காக ரூ.6 ஆயிரத்துக்கு அடமானம் வைத்த சிறுவனை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2019-03-06 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்தான். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின்போது தென்னை மரம் விழுந்ததில் அந்த சிறுவனின் தந்தை இறந்தார். இதையடுத்து அவருடைய இறுதி சடங்கிற்காக ரூ.6 ஆயிரத்துக்கு அந்த சிறுவன் அடமானம் வைக்கப்பட்டான். ஒரத்தநாடு அருகே உள்ள பொட்டலங்குடிக்காட்டை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் அந்த சிறுவனை அடமானமாக வாங்கி ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

இந்த தகவல் தஞ்சையில் உள்ள சைல்டுலைன் அமைப்புக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரேசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது உத்தரவின் பேரில் மண்டல வருவாய்த்துறை துணை தாசில்தார் அகத்தியன், வருவாய் ஆய்வாளர் மார்க்ஸ், கிராம நிர்வாக அதிகாரிகள் சந்திரகாசு, சக்திவேல், சைல்டு லைன் இயக்குனர் பாத்திமாராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன், தொழிலாளர் துறை ஆய்வாளர் அன்பழகன், ஒரத்தநாடு போலீஸ் ஏட்டு மகேஷ் பிரபு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ராதிகா, நலங்கிரி ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது மேலவன்னியப்பட்டு பகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டு இருந்த அந்த சிறுவனை அதிகாரிகள் குழுவினர் மீட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் சிறுவனுக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், விடுதலை சான்று வழங்கி உத்தரவிட்டார். மேலும் அடமானத்துக்கு வாங்கிய மகாலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன், கஜா புயலினால் இடிந்த வீட்டை சீரமைக்கவும், வறுமையை போக்கவும் அடமானமாக வைக்கப்பட்டான். அவனை நாகை மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் மீட்டனர். தற்போது 2-வதாக அடமானம் வைக்கப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

எனவே ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் சிறுவர்கள் ஆடுமேய்க்கும் தொழிலில் ஈடுபட்டாலோ அல்லது கொத்தடிமையாக இருந்தாலோ சைல்டு லைன் அமைப்புக்கு 1098 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்