வெளிநாடுகளில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.40½ லட்சம் தங்கம் பறிமுதல் ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது

சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.40½ லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கொழும்புக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது.

Update: 2019-03-07 23:00 GMT
ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில், சுற்றுலா விசாவில் கொழும்பு சென்றுவிட்டு திரும்பிய சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில், 2 பேரும் தங்க சங்கிலி, பிரேஸ்லெட், தங்க கட்டிகள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 670 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த வாலிபரிடம் நடத்திய சோதனையில், அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 230 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு சென்னை திரும்பி வந்த சென்னையை சேர்ந்த 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் 3 பேரின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.9 லட்சம் மதிப்புள்ள 270 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பெண்ணிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்க சங்கிலியையும் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் நடந்த சோதனையில் பெண் உள்பட 7 பேரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பிடிபட்ட 7 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு விமானத்தில் செல்வதற்காக வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர், குடியுரிமை சோதனை பகுதியில் இருந்தபோது அவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அவரது சூட்கேசில் துணிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் உள்பட வெளிநாட்டு பணத்தை கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை யாருக்காக கொழும்புக்கு கடத்த முயன்றார்?, அது ஹவாலா பணமா? என பிடிபட்ட வாலிபரிடம் சுங்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்